இரண்டாவது கதீர் சர்வதேச விழா, ஈராக்கின் நஜப் நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இமாம் அலீ (அலை) அவர்களின் புனித அடக்கஸ்தலத்தின் பரிபாலன சபையைச் சேர்ந்த தூதுக்குழு, பெய்ரூத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இச்செய்தி அறிவிக்கப்பட்டது.
பரிபாலன சபையின் தலைவர் சுஹைர் ஷர்பா தெரிவிக்கையில், ஈதுல் கதீர் நிகழ்வை முன்னிட்டு இச்சர்வதேச விழா இரண்டாவது முறையாக ஒழுங்கு செய்யப்படவுள்ளது என்றார்.
ஈதுல் கதீர் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் துல்ஹஜ் மாதத்தின் 18ம் தினமாகும். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், தமக்குப் பின் தமது பிரதிநிதியாக இமாம் அலீ (அலை) அவர்களை நியமித்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு இடம்பெற்றது இத்தினத்திலாகும்.
தூதுக்குழுவின் மற்றோர் உறுப்பினரான அலி அல்கிஸ்ரி குறிப்பிடுகையில், இவ்வருட விழா, முந்தைய விழாவை விட வேறுபட்டதாக இருப்பதுடன், கவிதை வாசிப்பு வட்டம் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் கண்காட்சி போன்ற புதிய பல நிகழ்வுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.
அரபு மற்றும் முஸ்லிம் உலகின் வெளியீட்டாளர்களின் பங்குபற்றுதலுடன் புத்தகக் கண்காட்சியொன்றும் இவ்விழாவின் பிரதான நிகழ்வுகளுள் ஒன்றாக ஒழுங்கு செய்யப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட அறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கலாசாரப் பிரமுகர்கள் இவ்விரண்டாவது சர்வதேச கதீர் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் பரிபாலன சபை நிருவாக உறுப்பினரான அவர் தெரிவித்தார்.
அல்கிஸ்ரி மேலும் குறிப்பிடுகையில், இந்நிகழ்வு இமாம் அலீ (அலை) அவர்களின் உயர்ந்த பண்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்துவதற்கான சிறந்ததொரு களமாக அமையும் என்றார்.
1274921